- Packages for JWT Token
jwtbearer
entityframeworkcore
entityframeworkcore.sqlserver
entityframeworkcore.tools
identitymodel.token.jwt
1.
வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாதுகொலோ? சகம் ஏழும் அளித்து
உண்டான், உறங்க, ஒழித்தான் பித்து ஆக, உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே, சகலகலாவல்லியே
வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகளே, என்னுடைய வெள்ளை உள்ளமாகிய குளிர்ந்த தாமரையில் தாங்கள் எழுந்தருளமாட்டீர்களா!
ஏழு உலகங்களையும் காக்கின்ற திருமால், திருப்பாற்கடலில் திருத்துயில் கொள்கிறார். அவ்வுலகங்களை அழிக்கின்ற சிவபெருமான், பித்தராகத் திகழ்கின்றார், இவ்வாறு இவர்கள் காத்து, அழிக்கின்ற அவ்வுலகங்களைப் படைக்கின்ற பிரமரோ கரும்பைப்போல் இனிமையான தங்கள்மீது அன்புகொண்டிருக்கிறார்.
அப்படிப்பட்ட பெருமாட்டியே, அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
2.
நாடும் பொருள் சுவை, சொல் சுவை தோய்தர நால் கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய், பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொன் கொடியே, கன தனக் குன்றும், ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே, சகலகலாவல்லியே.
தாமரை மலர் இருக்கையில் அமர்ந்திருக்கும் கலைமகளே, பசும்பொன் கொடியைப்போல் திகழ்பவரே, கனத்த, குன்றைப்போன்ற திருமார்பகங்களை உடையவரே, ஐந்தாகப் பகுக்கப்பட்ட, காடுபோல் அடர்ந்த திருக்கூந்தலைச் சுமக்கும் கரும்பைப்போன்றவரே,
அறிஞர்கள் நாடி ஆராயக்கூடியவிதத்தில், பொருள் சுவையும், சொற்சுவையும் தோய்ந்த நான்குவிதமான* பாடல்களைப் பாடுகின்ற பணியை எனக்குத் தந்தருளுங்கள்,
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
* நான்குவிதமான பாக்கள்: ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி அல்லது வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
3.
அளிக்கும் செழும் தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருள் கடலில்
குளிக்கும்படிக்கு என்று கூடும்கொலோ, உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவி மழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே, சகலகலாவல்லியே.
கலைமகளே,
பல நூல்களையும் வாசித்துத் தெளிந்த புலவர்கள் தங்களைப் போற்றிப் பாடுகிறார்கள், கவிதைகளை மழைபோல் பொழிகிறார்கள். தாங்கள் திருவுள்ளம்கொண்டு அவற்றைக் கேட்டு மகிழ்கிறீர்கள்,
தோகை விரிக்கும் மயிலைப்போன்றவரே, செழுமையான, தெளிய அமுதத்தைப்போன்ற தமிழை அளிப்பவரே, அந்தத் தமிழைச் சுவைத்துத் தங்களுடைய அருளாகிய கடலில் நான் குளிக்கும் நாள் என்றைக்கோ!
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
4.
தூக்கும் பனுவல், துறை தோய்ந்த கல்வியும், சொல் சுவை தோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய், வட நூல் கடலும்
தேக்கும் செழும் தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே, சகலகலாவல்லியே.
கலைமகளே,
கடல்போன்ற வடமொழி நூல்களையும், சிறந்த, செழுமையான தமிழ் நூல்களையும் தொண்டர்களுடைய சிறந்த நாவில் நிலைக்கச்செய்து காப்பவரே, கருணைக் கடலே,
அனைவரும் விரும்புகின்றவகையில் சிறந்த பாடல்களை இயற்றும் திறமையும், பல துறைகளில் தோய்ந்த கல்வியும், சுவையான சொற்களுடன் பேசுகின்ற திறமையும் எங்களுக்குள் பெருகும்படி செய்தருளுங்கள்,
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
5
பஞ்சு அப்பு இதம் தரு செய்ய பொன் பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே, நெடும் தாள் கமலத்(து)
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய், சகலகலாவல்லியே.
கலைமகளே,
நீண்ட தண்டையுடைய தாமரையில் வீற்றிருப்பவர், அன்னக்கொடியை உயர்த்தியவர் பிரமர், அவருடைய சிறந்த திருநாக்கையும், திருவுள்ளத்தையும் வெள்ளைத்தாமரையாகக் கருதி, அவற்றையே தங்களுடைய ஆசனமாக எண்ணித் தாங்கள் வீற்றிருக்கிறீர்கள்,
செம்பஞ்சுக் குழம்பைப் பூசி அழகுடன் திகழ்கின்ற, செம்மையான, அழகிய தங்களுடைய திருவடிகளாகிய தாமரைகள் என்னுடைய நெஞ்சமாகிய நீர்நிலையில் இன்னும் மலரவில்லையே, இது ஏன்?
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
6
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும்பொழுது எளிது எய்த நல்காய், எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெம் காலும் அன்பர்
கண்ணும் கருத்து நிறைந்தாய், சகலகலாவல்லியே.
பண்ணும்" என்ற வார்த்தைக்கு "செய்யும்" அல்லது "உருவாக்கும்"
"பனுவல்" என்ற சொல்லுக்கு "நூல்" அல்லது "புத்தகம்" என்று பொருள்.
தீஞ்சொல் - pleasant expression, "இனிய மொழி" அல்லது "மகிழ்ச்சியான பேச்சு"
நல்காய்" என்ற வார்த்தைக்கு "அருள்வாய்"
கலைமகளே,
எழுதப்படாத (சொல்லப்படுகிற) வேதங்களிலும் வான், நிலம், நெருப்பு, காற்று, விரைவான காற்று ஆகிய ஐம்பூதங்களிலும் அன்பர்களுடைய கண்களிலும் கருத்திலும் நிறைந்திருப்பவரே,
பண், பரதம், கல்வி, இனிய சொற்களால் ஆன பாடல்கள் ஆகியவற்றையெல்லாம் நான் எண்ணும்போது எளிதாகச் செய்யும்படி அருளுங்கள், (இசையிலும் நடனத்திலும் நல்லறிவிலும் எழுத்துத்திறனிலும் மற்ற கலைகளிலும் நான் சிறந்துவிளங்கும்படி செய்தருளுங்கள்,)
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
7
பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய், உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத் தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப் பேடே, சகலகலாவல்லியே.
கலைமகளே,
அடியவர்கள் தங்களை உள்ளத்தில் எண்ணி, இனிய தமிழில் பாடல்களைத் தீட்டுகிறார்கள், அந்தப் பாடல்களுக்குள் இருக்கும் இனிய பாலைப்போன்ற, அமுதத்தைப்போன்ற கருத்துகளைத் தாங்கள் தெளிவாக்குகிறீர்கள், வெண்ணிற அன்னத்தைப்போன்ற பெருமாட்டியே,
பொருளுள்ள, பயனுள்ள பாடல்களை எழுதும் திறன் எனக்குக் கிடைக்கும்படி செய்யுங்கள், தங்களுடைய திருக் கடைக்கண் பார்வையை என்மீது செலுத்தியருளுங்கள்,
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
8
சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல
நல் வித்தையும் தந்து அடிமைகொள்வாய், நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே, சகலகலாவல்லியே.
கலைமகளே,
கல்வியாகிய பெரிய செல்வத்தைப் பெற்றவர்கள், மென்மையான தாமரை மலரை இருக்கையாகக் கொண்ட திருமகளுடைய அருள் நமக்குக் கிடைக்கவில்லையே என்று ஒருபோதும் வருந்தமாட்டார்கள், (கல்விச் செல்வத்தால் பணச்செல்வம் கிட்டும்), அப்படிப்பட்ட கல்வியாகிய பெருஞ்செல்வத்தை வழங்குகின்ற பெருமாட்டியே,
எனக்குச் சொல் வலிமையையும், அனைத்தையும் கவனித்து நினைவில் கொள்கின்ற ஆற்றலையும், பாடல்களைச் சொல்லவல்ல நல்ல திறனையும் வழங்கி, என்னைத் தங்களுடைய அடிமையாக்கிக்கொள்ளுங்கள்,
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
9
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய் ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார், நிலம் தோய் புழைக் கை
நல் குஞ்சரத்தின் பிடியோடு அரச அன்னம் நாண நடை
கற்கும் பத அம்புயத் தாளே, சகலகலாவல்லியே.
கலைமகளே,
நிலத்தைத் தொடும் அளவுக்கு நீண்ட, துளையுள்ள தும்பிக்கையைக் கொண்ட, நல்ல பெண்யானையும், அரச அன்னமும்கூட, தங்களுடைய அழகிய திருநடையைக் கண்டால் நாணி நிற்கும். அப்படிப்பட்ட பெருமாட்டியே, தாமரைபோன்ற திருவடிகளை உடையவரே,
சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராகத் திகழ்கின்ற மெய்ஞ்ஞானத்தின் திருவுருவமாகத் திகழ்கின்ற தங்களை முழுமையாக அறிந்தவர்கள் யார்? (யாருமில்லை!)
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
10
மண் கண்ட வெண் குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவில் பணியச்செய்வாய், படைப்போன் முதலாம்
விண் கண்ட தெய்வம் பல் கோடி உண்டேனும், விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ, சகலகலாவல்லியே.
கலைமகளே,
இவ்வுலகைப் படைக்கும் பிரமரில் தொடங்கி விண்ணுலகில் பல கோடி தெய்வங்கள் உண்டு. எனினும், தங்களைப்போன்ற கண்கண்ட தெய்வம் வேறு யார்?
மண்ணுலகம் முழுவதையும் வெண்கொற்றக்குடையின்கீழ் ஆள்கின்ற, சிறப்புடைய மன்னர்கள்கூட, என்னுடைய பண்ணிசைப்பாடலைக் கேட்டதும் என்னைப் பணிந்து வணங்கும்படி செய்தருளுங்கள், (சிறந்த கலைத்திறனை எனக்கு வழங்கியருளுங்கள்,)
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
https://nchokkan.wordpress.com/2019/11/01/sklklvlm/
http://nchokkan.com/kalaimagal-kaipporul-kannadasan-poetry-lyrics-auvaiyar/
No comments:
Post a Comment